உக்ரேனுக்கு தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை அனுப்பும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து பாதுகாப்பு துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இங்கிலாந்து படையினர் அந்த நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார். இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது குறித்து ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ் கூறுகையில், உக்ரைனுக்கு இங்கிலாந்து ராணுவ படையினர் வருகை தந்தால் அவர்கள் குறி வைத்து தாக்கப்படுவார்கள். அதற்கான சட்டபூர்வ உரிமை ரஷ்யாவுக்கு உள்ளது என்று எச்சரிக்கை செய்தார்.
இது குறித்து ரிஷி சுனக் கூறியதாவது, உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு இங்கிலாந்து வீரர்களை அனுப்பும் திட்டம் தற்போதைக்கு எதுவும் இல்லை. இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் கிராண்ட் கூறிய கருத்து என்றாவது ஒரு நாள் அனுப்ப நேரிடலாம் என்பதை குறிக்கிறது. எதிர்காலத்தில் உக்ரைன் வீரர்களுக்கு இங்கிலாந்து வீரர்கள் ராணுவ பயிற்சி அளிக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.கடந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் உக்ரைன் வீரர்களுக்கு இங்கிலாந்தில் ராணுவ வீரர்கள் பயிற்சி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.