குஜராத் கலவர ஆவணப்பட சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு ரிஷி சுனக் ஆதரவு அளித்துள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது, குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். இதற்கிடையே, லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. முதல் பகுதி, கடந்த செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பானது.
இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி. இம்ரான் உசைன் இதுபற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், எந்த நாட்டில் மக்கள் துன்புறுத்தப்பட்டாலும் நாம் சகித்துக் கொள்ள மாட்டோம். ஆனால், அந்த ஜென்டில்மேன் பற்றி முன்வைக்கப்படும் அனைத்து கருத்துகளிலும் எனக்கு உடன்பாடு இருப்பதாக கூற முடியாது என்று அவர் கூறினார்.














