பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் மத்திய வங்கி ஆறாவது முறையாக வட்டி விகிதத்தை 22 சதவீதமாகவே தொடரும் என அறிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்த பணவீக்க விகிதம் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 32.89% என்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் மத்திய வங்கி ஆறாவது முறையாக வட்டி விகிதத்தை 22% ஆகவே தொடரும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் செப்டம்பர் மாதம் 2025 ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தானின் பண வீக்கம் விகிதம் 5-7 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு புதிய அரசு பதவியேற்ற இரண்டு வாரங்களில் பணவீக்கம் கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. புள்ளி விவரங்கள் படி 18 அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகமாகவும், 14 பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும், 23 பொருட்கள் விலை மாற்றம் இன்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச நிதியத்திடமிருந்து 6 முதல் 8 பில்லியன் டாலர் புதிய கடன்களை பாகிஸ்தான் கோரலாம் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.