தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள அரிய வகை பவளப்பாறைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர் காப்பகம் தமிழகத்தின் கடற்பகுதியில் உள்ள பவளப்பாறைகளை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். சுமார் 560 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பல்வேறு சிறிய தீவுகளை உள்ளடக்கி இந்த காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டலம் ஆய்வு நிறுவனமான NOAA, அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மன்னார் வளைகுடா பகுதியில் இயல்பை விட கூடுதல் வெப்பநிலை பதிவாகி வருவதால், பவளப்பாறைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என்ற சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவளப்பாறைகள் அழிவது என்பது ஒட்டுமொத்த இயற்கை கட்டமைப்பையும் சீர்குலைப்பதாக அமையும் என கூறப்படுகிறது.