தெற்கு ரயில்வே பொதுமேலாளராக ஆர்.என்.சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தெற்கு ரயில்வே பொதுமேலாளராக இருந்த ஜான் தாமஸ், கடந்த ஜனவரி 31-ம் தேதி ஓய்வு பெற்றார். அதன்பின் ஐசிஎஃப் பொதுமேலாளர் ஏ.கே.அகர்வால், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பொறுப்பை கவனித்து வந்தார். இவர், மார்ச் மாதத்துடன் இந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா, பொதுமேலாளர் பொறுப்பை கவனித்து வந்தார்.
இந்நிலையில், தெற்கு ரயில்வே புதிய பொதுமேலாளராக ஆர்.என்.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ரயில்வே பொறியாளர்கள் சேவையில் 1986 பேட்ச் அதிகாரியான ஆர்.என்.சிங், ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் பொறுப்பு வகித்துள்ளார். ரயில்வே அமைச்சகத்தின் உள்கட்டமைப்பு பிரிவு செயல் இயக்குநர், ரயில்வே வாரிய செயலர் ஆகிய பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.