சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களை பூமிக்கு அழைத்து வர சோயுஸ் விண்கலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டது. அந்த விண்கலத்தில், கடந்த டிசம்பர் மாதத்தில் கூலன்ட் கசிவு ஏற்பட்டது. விண்வெளியில் உள்ள சிறிய விண்கல் ஒன்று, விண்கலத்தில் மோதியதால் இந்த கசிவு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் மாற்று விண்கலம் அனுப்பப்பட்டது. மாற்று விண்கலத்திலும் கசிவு ஏற்பட்டது அதிர்ச்சியை உண்டாக்கியது. இது உற்பத்தியில் நிகழ்ந்த கோளாறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது. அதனைக் கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில், இது உற்பத்தியில் ஏற்பட்ட பிழை அல்ல என்றும் வெளியிலிருந்து வந்த பாதிப்பு காரணமாகவே கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், சோயுஸ் விண்கலத்தில் 12 மில்லி மீட்டர் அளவில் துளை ஏற்பட்டுள்ளது காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த துளை, உற்பத்தியின் போது காணப்படவில்லை. எனவே, கசிவு வெளியில் இருந்து வந்த பொருளால் ஏற்பட்டுள்ளதாக ரோஸ்காஸ்மோஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.