கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சோயூஸ் விண்கலத்தில் ‘கூலண்ட்’ கசிவு ஏற்பட்டது. இது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர். இறுதியில், ‘இந்த விண்கலம் மூலம் வீரர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவது சாத்தியப்படாது’ என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வரும் பிப்ரவரி மாதத்தில், ரஷ்யா, புதிய சோயூஸ் விண்கலம் ஒன்றை அனுப்ப உள்ளது. இதன் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் மீட்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ், சோயூஸ் எம் எஸ் 23 விண்கலம், பிப்ரவரி 20ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று ஜனவரி 11ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. இது விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள சோயூஸ் எம் எஸ் 22 விண்கலத்திற்கான மாற்றாக செயல்படும். சோயூஸ் எம் எஸ் 22, ஆளில்லாமல் பூமிக்கு கொண்டுவரப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சோயூஸ் எம் எஸ் 23 விண்கலம், ஆளில்லாமல், விண்வெளி நிலையத்திற்கு தேவையான சில பொருட்களோடு விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.