வரும் செப்டம்பர் மாதத்துடன், 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அதுவரையில், மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகளில் திருப்பி செலுத்தலாம் எனவும், அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மே 19ஆம் தேதி வெளியான இந்த அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள 50% 2000 நோட்டுகள் வங்கிகளில் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், “கடந்த மே 23 தொடங்கி இதுவரையில், 1.8 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் திருப்பி செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 85% வங்கிகளில் வைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், செப்டம்பர் வரை அவகாசம் உள்ளதால், மக்கள் பதற்றம் அடையாமல் நோட்டுகளை மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதே வேளையில், 2000 ரூபாய் நோட்டுகள் போல, 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படாது. மேலும், 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் கொண்டு வரும் திட்டம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.