கோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி உயிரிழந்த 5 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு மாவட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில் கோவில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, சூர்யா (வயது-22), பானேஷ் (வயது-22), ராகவன் (வயது-22) யோகேஸ்வரன் (வயது-21) மற்றும் ராகவன் (வயது-18) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.