ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் பதவி வகித்தபோது விதிமுறைகளை மீறி அவர் வீடி யோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வங்கி ஒழுங்குமுறை விதி, ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை மீறி வீடியோகான் குழுமத்துக்கு கடன் வழங்கியதற்காக பிரதிபலனாக சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நியூபவர் ரீனிவபிள்ஸ் நிறுவனத்தில் வேணு கோபால் தூத் ரூ.64 கோடியை முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தொகை வீடியோகான் குழுமத்துக்கு ஐசிஐசிஐ வங்கி கடன் வழங்கிய 2010 மற்றும் 2012-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பகுதி பகுதியாக செலுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையல், சில நாட்களுக்கு முன்பு ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் அதன் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை சிபிஐ சில நாட்களுக்கு முன்பு கைது செய்தது. மும்பை நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், தற்போது இந்த வழக்கில் 3 வது முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வீடியோகான் குழும அதிபர் வேணுகோபால் தூத்தையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.