தென்காசியை சேர்ந்த தம்பதியினர் டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநர்களிடம் சைகை காண்பித்து ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம் எஸ் வளைவு என்ற தமிழக கேரளா எல்லை பகுதியில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி நிலை தடுமாறி செங்கோட்டை கொல்லம் ரயில் மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் வசித்த தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதி அம்மன் கோவில் திருவிழா சிறப்பு பயணிகள் ரயில் வரும் சத்தம் கேட்டு தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடி சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுனரிடம் சைகை காண்பித்து ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தடுத்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தினர். மேலும் கொல்லம் நோக்கி சென்ற விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பெரும் விபத்து நிகழ்வதை தடுத்து நிறுத்திய தம்பதியினருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரூபாய் ஐந்து லட்சம் வெகுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.