சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களை பூமிக்கு அழைத்து வர சோயுஸ் விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, மாற்று விண்கலம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி அனுப்பப்பட உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்காஸ்மோஸ், இந்தப் புதிய கலத்தில், 2 ரஷ்யா விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரர் பூமிக்கு திரும்புவர் என்று தெரிவித்துள்ளது.
விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களை அழைத்து வருவதற்காக, முதல் முதலாக, டிசம்பர் மாதத்தில் சோயுஸ் விண்கலம் செலுத்தப்பட்டது. அதில் கூலன்ட் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, மாற்று விண்கலம் ஜனவரி மாதம் அனுப்பப்பட்டது. தற்போது, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாற்று விண்கலத்திலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதை குறித்து விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களை அழைத்து வருவதற்கான மற்றொரு விண்கலம், பிப்ரவரி 24ம் தேதி அனுப்பப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.