ரஷ்யா பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த பத்து மாதங்களாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா வுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், ரஷ்யா பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் இன்று அறிவித்துள்ளது. ரஷ்ய ராணுவம் உக்ரைனில் பொதுமக்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்புகள், மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், ரஷ்யா பயங்கரவாத ஆதரவு நாடு என்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.














