ரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி பெட்டிலின், சேர்கி ப்ரோக்கோபேய் ஆகிய விண்வெளி வீரர்களும், நாசாவைச் சேர்ந்த பிராங்க் ரூபியோ என்ற விண்வெளி வீரரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளனர். அவர்கள், கடந்த செப்டம்பர் மாதத்தில் சோயுஸ் எம் எஸ் 22 விண்கலம் மூலம் அங்கு சென்றனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம், இந்த விண்கலத்தில் கசிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் மாற்று விண்கலம் அனுப்பப்பட்டது. அதிலும் கசிவு ஏற்பட்டதால், மற்றொரு விண்கலம் பிப்ரவரி 24ஆம் தேதி அனுப்பப்பட உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது.
பிப்ரவரி 24ஆம் தேதி அனுப்பப்படும் விண்கலத்தில், வரும் மார்ச் 28ஆம் தேதி விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவர் என்று கருதப்பட்டது. ஆனால், ரஷ்ய விண்வெளி அமைப்பான ரோஸ்காஸ்மோஸ், விண்வெளி வீரர்கள் வரும் செப்டம்பர் மாதமே பூமிக்கு அழைத்து வரப்படுவர் என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
பொதுவாக, பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படும் வீரர்கள், 6 மாத காலம் மட்டுமே அங்கு தங்க வைக்கப்படுவர். உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்கும் வண்ணம் 6 மாத காலத்திற்கு மேல் அவர்களது இருப்பு நீட்டிக்கப்படாது. எனவே, விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களின் ஒப்புதலைப் பெற்று, அவர்களது தங்கும் காலம் நீட்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.