உக்ரைன் நாட்டில், ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை, ரஷ்யாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கும் திட்டத்தில், இன்று, ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட உள்ளதாக, அவரது நேரடி செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவின் கிராண்ட் கிரெமிலின் மாளிகையில் உள்ள ஜார்ஜியன் ஹாலில் இந்த நிகழ்வு நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வுக்குப் பின்னர், ரஷ்ய அதிபர் புதின் மக்கள் முன் உரையாற்றுவார் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலகின் பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஜெர்மனி நாடு, "உக்ரைன் பகுதிகளை ரஷ்யா உடன் இணைப்பதற்கு நடத்தப்பட்ட போலி வாக்கெடுப்பை ஜெர்மனி ஏற்றுக்கொள்ளாது" என்று தெரிவித்துள்ளது. மேலும், ஜெர்மன் நாட்டின் சான்சலர் ஓலப் ஸ்கூல், ஜெர்மனி எப்பொழுதும் உக்ரைன் நாட்டிற்கு துணை நிற்கும் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார். கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ, "ரஷ்யா, உக்ரைன் நாட்டின் பகுதிகளை இணைப்பது சட்டவிரோதமானது" என்று கூறியுள்ளார்.
செர்பியா நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் ஊகிக், "செர்பியா, ஐநா சபை விதித்துள்ள சர்வதேச சட்டங்களை மதிக்கிறது. மேலும், அதன் வழியே நிற்கிறது. எனவே, ரஷ்யாவின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார். ரஷ்யாவின் இந்த செயல்பாடுகளால், ஐரோப்பிய கமிஷன், மேலும் சில பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளது. குறிப்பாக, போர் கருவிகள் தொடர்பான தொழில்நுட்ப சேவைகள் வழங்கப்பட மாட்டாது என்று ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உருசுலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், ஐநா சபையின் செயலாளர் அந்தோணியோ குட்டரஸ், உக்ரைன் பகுதிகளை ரஷ்யா உடன் இணைப்பது சர்வதேச விதிகளுக்கு மாறானது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.