உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று, ரஷ்ய போர் விமானம் ஒன்று, தவறுதலாக ரஷ்யாவை சேர்ந்த பெல்கொரோட் நகரில் குண்டு வீசி உள்ளது. தவறுதலாக, சொந்த நகரத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Su 34 ரக போர் விமானம் வீசிய வெடிகுண்டால் நகரத்தின் மையப்பகுதியில் பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. இரண்டு பெண்கள் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், நகரில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையோரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளதால், இவ்வாறு நேர்ந்துள்ளது. ஏற்கனவே, போர் காரணமாக எல்லை நகர மக்கள் அஞ்சி வாழ்ந்து வரும் நிலையில், இந்த தாக்குதல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.