சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரில் சர்வதேச தூதராக அறிவித்திருக்கிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடரில் சர்வதேச தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உலகக்கோப்பை தொடரில் ஆறு முறை தேசத்திற்காக விளையாடி இருக்கிறார். தற்போது நடக்க உள்ள தொடரில் போட்டி தொடங்குவதற்கு முன்பு இவர் ஆண்கள் உலக கோப்பையுடன் நடந்து வர இருக்கிறார். இதுகுறித்து சச்சின் கூறியுள்ளதாவது, தனது கிரிக்கெட் பயணத்தில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்றதுதான் மிகவும் பெருமைமிக்க தருணம் ஆகும். இந்த 2023 உலக கோப்பை தொடரில் தலைசிறந்த வீரர்கள் கடுமையாக போராட இருக்கின்றனர். இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்காக ஆவலுடன் தான் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.