இன்றைய விலைவாசி உயர்விற்கு ஏற்ப கூடுதல் சம்பளம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டுமென மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தில் வீடு தேடிச்சென்று மருந்து, மாத்திரைகள் வழங்க சுகாதார தன்னார்வலர்கள் பணியில் இளம்பெண்கள் 11 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பகுதி நேர சுகாதார தன்னார்வலர்களுக்கு மாதம் 4 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனாலும் அவர்கள் முழு நேர பணியாளர்களாவே பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், சம்பள உயர்வு குறித்து திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க தலைவர் கவிதா தலைமை வகித்தார். செயலாளர் சாந்தாமணி உட்பட நுாற்றுக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.
பின் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், மக்களை தேடி மருத்துவம் பணியுடன், இதர ஆன்லைன் பணிகளையும் செய்து வருகிறோம். குறைவான சம்பளமும், உரிய காலத்தில் வழங்காமல் தாமதம் ஏற்படுகிறது. இன்றைய விலைவாசி உயர்வை கணக்கிட்டு கூடுதல் சம்பளம் நிர்ணயம் செய்து, வங்கி கணக்கு வாயிலாக வழங்க வேண்டும். போக்குவரத்துப்படி, உணவுப்படி, மருத்துவ உபகரண பராமரிப்புப்படி வழங்க வேண்டும்.
மேலும், பணியை முழு நேர பணியாக நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் விடுப்பு வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை, சீருடை வழங்க வேண்டும். பெண் தன்னார்வலர் என்பதை சுகாதார ஊழியராக மாற்றி நியமிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.