தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக உப்பின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இந்தியா மட்டும் இன்றி இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. தூத்துக்குடி, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார், பழைய காயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக உப்பளங்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது. மேலும் இதன் காரணமாக தூத்துக்குடியில் ஏற்றுமதி செய்யப்படும் உப்பு வரத்து குறைவாக இருந்ததால் தூத்துக்குடியிலிருந்து விற்பனைக்கு வரும் உப்பு விலை உயர்ந்துள்ளது. 50 சிறிய பாக்கெட்டுகள் கொண்ட ஒரு மூட்டை 230க்கு விற்பனையான நிலையில் தற்போது 290 ஆகவும் சில்லறை விலையில் கல் உப்பு ஒரு பாக்கெட் 7 ரூபாயில் இருந்து தற்போது ஒரு பாக்கெட் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு உப்பு விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.