ஓபன் ஏஐ நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட சாம் அல்ட்மேன், மீண்டும் ஓபன் ஏஐ தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வார இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மேன், நிறுவனத்தின் நிர்வாக குழுவினரால் நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைய உள்ளதாக கூறினார். மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெள்ளா, சாம் வரவுக்கு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சாமை நிறுவனத்திலிருந்து நீக்கியதற்கு ஓபன் ஏஐ ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கிட்டத்தட்ட 500 ஊழியர்கள், நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக மிரட்டல் கடிதம் விடுத்தனர். அதனை கருத்தில் கொண்டு, மீண்டும் அவர் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை நியமிப்பதற்கு, கொள்கை ரீதியான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிர்வாக குழு தெரிவித்துள்ளது. மீண்டும் ஓபன் ஏஐ நிறுவனத்தில் இணைவது குறித்து சாம் அல்ட்மேன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஓபன் ஏஐ நிறுவனத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். சத்யா நாதெள்ளா மற்றும் புதிய நிர்வாக குழுவினர் ஆகியோரது ஆதரவை பெற்று, மீண்டும் ஓபன் ஏஐ நிறுவனத்தில் இணைவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இருக்கும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் உறவு மேலும் வலுவடைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.