ஆழ் கடலில், சுமார் 6000 மீட்டர் ஆழத்திற்கு, மனிதர்களை அனுப்பி ஆராய்ச்சி செய்ய, சமுத்ரயான் திட்டத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டு நிறைவு பெறும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.
ஆழ் கடலில் உள்ள சூழல், பல்லுயிர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியுலகத்திற்கு தெரியாததாக உள்ளன. எனவே, அது குறித்த ஆராய்ச்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதற்காக, பிரத்தியேகமாக நீர்மூழ்கி வாகனம் ஒன்றை, தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த வாகனத்தில், மூன்று பேர் ஆழ் கடலுக்கு சென்று ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சி நடத்துவதற்கு ஏதுவாக, இந்த வாகனத்தில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நீர்மூழ்கி வாகனம் சோதனை கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடலடி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான பிரத்தியேக நீர்மூழ்கி வாகனத்தை பெற்றுள்ள அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், சீனா நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துள்ளது.