சரிகம கார்வான், பதிவேற்றப்பட்ட ஹிந்தி பாடல்களுடன் கூடிய புதிய மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது.
சரிகம கார்வான் என்பது டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்பட்ட பாடல்கள், எப்எம் ரேடியோ போன்ற அம்சங்களை உள்ளடக்கிய கருவியாகும். இதில் பென்டிரைவ் மூலமாகவும் பாடல்களைக் கேட்க முடியும். இதன் மூலம், இணையம் இல்லாமல் இசைத் தொகுப்புகளைக் கேட்கும் வசதி அறிமுகமானது. தற்போது, இதன் சார்பாக, கீபேட் அம்சத்துடன் கூடிய கைபேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 1500 ஹிந்தி பாடல்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. பழைய திரை இசைப் பாடல்களை, கலைஞர்கள் தொகுப்பாகவும், பாடல்கள் தன்மை பொறுத்த தொகுப்பாகவும் ஒருங்கிணைத்து கேட்டுக் கொள்ளலாம். மேலும், இந்த கைப்பேசியில், இரண்டு சிம் கார்டுகள் பொருத்தும் வசதி, எஃப்எம் ரேடியோ வசதி, கேமரா வசதி, 8ஜிபி கொள்திறன் கொண்ட மெமரி கார்டு மற்றும் ஹிந்தி, தமிழ் ஆகிய பன்மொழி வசதி போன்றவை உள்ளன. அத்துடன், தனிப்பட்ட பாடல்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை சேமிக்க 2 ஜிபி அளவிலான கூடுதல் கொள்திறன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2500 mAh திறன் கொண்ட பேட்டரி வசதி கொண்ட இந்த கைபேசி, மீடியா டெக் ப்ராசஸரில் இயங்குகிறது. ஒரு வருட உத்தரவாதத்துடன், 3 நிறங்களில் வெளிவந்துள்ள இந்த கைபேசி, இரண்டு வித திரையளவில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2.4 இன்ச் திரையளவு கொண்ட கைபேசியின் விலை 2490 ரூபாயாகவும் 1.8 இன்ச் திரையளவு கொண்ட கைபேசியின் விலை 1990 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய சரிகம கார்வான் கருவியைப் போலவே, இந்த கைபேசியும் saregama.com தளத்தில் மட்டுமல்லாது, அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணைய வர்த்தகத் தளங்கள் மற்றும் சில்லறை வணிகச் சந்தைகள் போன்றவற்றிலும் விற்பனை செய்யப்படும். சுமார் 120 ஆண்டு கால இந்திய இசையின் 50 சதவீதத்தை, சரிகம கார்வான் தொகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.