சவுதி அரேபியா நாட்டில் இருந்து முதல் முறையாக பெண் விண்வெளி வீரர் ஒருவர், விஷன் 2030 திட்டத்தின் கீழ், விண்வெளிக்குச் செல்ல உள்ளார்.
விண்வெளி துறையைப் பொறுத்தவரை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா இடையே தீவிர போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கான அடக்குமுறைகளை களையும் நாடாகத் தன்னை அடையாளப்படுத்தி வரும் சவுதி அரேபியா, முதல்முறையாக, பெண் விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, நிகழாண்டின் இறுதியில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சவுதி அரேபியாவை சேர்ந்த அலி அல் கர்னி மற்றும் ரியானா பெர்னாவி ஆகிய ஆண் மற்றும் பெண் விண்வெளி வீரர்கள் பயணிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிக்குப் பின், பெண்கள் கார் ஓட்டுவது, ஓட்டுனர் உரிமம் பெறுவது, திரையரங்குகளில் சினிமா பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில், பெண் ஒருவர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.