அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் விண்ணப்பத்துடன் வரைபடம் மற்றும் இடத்தின் பரப்பு குறித்த உண்மைத் தன்மையை பதிவுத் துறையிடம் பெற வேண்டும் என நகர ஊரமைப்பு இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் நகர ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் மனைப்பிரிவு வரைபடத்தின் நகல் மட்டும் விண்ணப்பத்துடன் பெறப்படுவதால் அந்த மனைப்பிரிவின் உண்மையான பரப்பு குறித்து அறிய இயலாமல் மனுதாரரால் கூடுதலாக பரப்பு சேர்க்கப்பட்டு கூடுதல் பரப்புக்கும் வரன் முறைப்படுத்தும் நிலை உள்ளது.
இதைத் தவிர்க்க, வருங்காலங்களில் பெறப்படும் விண்ணப்பத்துடன் இணைத்து பெறப்படும் 2016 அக்.20-ம் தேதிக்கு முந்தைய மனைப்பிரிவு வரைபடம் இணைக்கப்பட்ட கிரயப்பத்திர நகலை பத்திரப்பதிவுத் துறைக்கு அனுப்புதல் அல்லது அந்த மனைப்பிரிவின் இதர விவரங்களைப் பத்திரப்பதிவுத் துறைக்கு அனுப்புதல் வேண்டும். மேலும், அந்த மனைப்பிரிவு 2016 அக்.20-ம் தேதிக்கு முன் எவ்வளவு பரப்பில் அமைந்திருந்தது என்பதன் உண்மைத்தன்மை குறித்து சார்-பதிவாளரிடம் விவரம் பெற்று, அதன்பின் அனுமதியற்ற மனைப்பிரிவு விண்ணப்பத்தைப் பரிசீலிக்க வேண்டும். அந்த விவரங்களுடன் மட்டுமே தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.