பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணம் செய்து கொள்ளலாம் என தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச நோட்டு, பாட புத்தகங்கள் வழங்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதன்படி அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாமா? அல்லது புதிய பஸ் பாஸ் தரும் வரை டிக்கெட் எடுக்க வேண்டுமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் இருந்தது. இது குறித்து போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரி கூறுகையில், அரசு பஸ்களில் பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம். அவர்கள் சீருடை அணிந்து இருந்தாலே இலவசமாக பயணிக்கலாம். இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவச பாஸ் வழங்குவதற்காக கல்வித்துறையில் இருந்து மாணவர்கள் விவரங்கள் பெற்று ஆன்லைன் மூலம் புதிய பஸ் பாஸ் விரைவாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது