கிரீன்லாந்து பனி பிரதேசத்தில் இருந்து புதிய வகை வைரஸை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ், 1981 ஆம் ஆண்டு கடற் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, முதல் முறையாக, கிரீன்லாந்து போன்ற பனி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, வைரஸ்கள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். ஆனால், இந்த வைரஸ் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த வைரஸ் பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், “இவை பனிக்கட்டிகள் உருகுவதை தடுப்பதற்கு மறைமுக ஆயுதங்களாக செயல்படுகின்றன” என தெரிவித்துள்ளனர். அதன்படி, தற்போது உலகம் எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சனையான புவி வெப்பமயமாதலுக்கு இந்த வைரஸ் மூலம் தீர்வு ஏற்படலாம் என கருதுகின்றனர். சாதாரண பாக்டீரியாவை விட 1000 மடங்கு சிறியதாக வைரஸ்கள் இருக்கும். ஆனால், கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ், 20 முதல் 200 நானோ மீட்டர் என்ற பொதுவான வைரஸ் அளவைவிட கூடுதலாக, 2.5 மைக்ரோ மீட்டர் அளவில் உள்ளன.