முல்லைப்பெரியாறு அணையில் இன்று நில அதிர்வுகளை கண்டறியும் 'சீஸ்மோகிராப்' கருவி பொருத்தபடுகிறது.
முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளை கண்காணிக்க சீஸ்மோகிராப் எனப்படும் நில அதிர்வு மானிகள் பொருத்த கேரள கண்காணிப்பு குழுவை வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற மேற்பார்வை குழுவின் கூட்டத்தில் பெரியாறு அணையின் நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து அணையில் நில அதிர்வு மற்றும் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் மற்றும் ஆக்ஸலரோகிராப் கருவிகள் வாங்குவதற்கு ரூ.99.95 லட்சம் நிதி தமிழ்நாடு பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று சீனியர் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் அணைப்பகுதியில் 3 இடங்களில் நில அதிர்வு மானி பொருத்தப்படுகிறது. ஆக்ஸலரோகிராப் கருவி அணையின் மேல் பகுதியிலும் சீஸ்மோகிராப் கருவி பெரியாறு அணை கேப்பிலும் பொருத்தப்படுகிறது. இரு மாநிலத்துக்கான பிரச்சினை என்பதால் இங்கு அமைக்கப்படும் நில அதிர்வு மானியின் அறிக்கை ஒவ்வொரு 15 நொடிக்கும் ஐதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் நில நடுக்க ஆய்வுக்குழுவுக்கு தகவல் செல்லும் வகையில் 5 ஆண்டு ஒப்பந்தத்துடன் அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.