சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க கடற்படை கப்பலும், 2 விமானப்படை விமானங்களும் விரைந்துள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக சூடான் ராணுவ தளபதி அப்தல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும், துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் டக்ளோவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் உள்நாட்டு போராக மாறியுள்ளது. இருதரப்பினரிடையேயான கடும் மோதலில் ஒரு இந்தியர் உள்பட அப்பாவி பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்திய கடற்படைக்கு சொந்தமான சுமேதா கப்பல் சூடான் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130ஜெ ரகத்தை சேர்ந்த 2 விமானங்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.