அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்ட முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக, இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் அதாவது 1.30 சதவீதம் குறைந்து 80,684.45 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 50, 332.25 புள்ளிகள் அதாவது 1.35 சதவீதம் குறைந்து 24,336 ஆகவும் சரிந்தது.
அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஜப்பான் வங்கி (BoJ) மற்றும் இங்கிலாந்து வங்கி (BoE) ஆகியவை தங்கள் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (FII) தொடர்ச்சியான முதலீட்டு வெளியேற்றம், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு போன்ற காரணிகள் சந்தையின் இந்த இறக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இன்றைய நாளின் வர்த்தகத்தை பொறுத்தவரை, ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்ததால், ஒட்டுமொத்த சந்தையும் இறங்கு முகத்தை நோக்கி நகர்ந்தது. நிஃப்டி 50 இல், சிப்லா மற்றும் ஐடிசி ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சிறிதளவு லாபம் ஈட்டின. அதே சமயம் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் 5.27 சதவீதமும், கிராசிம் 3.21 சதவீதமும் நஷ்டத்தை சந்தித்தன.