இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. அதன்படி, தொடர்ச்சியாக மூன்றாம் அமர்வாக பங்குச்சந்தையில் ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 229.84 புள்ளிகள் உயர்ந்து, 71336.8 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 91.95 புள்ளிகள் உயர்ந்து, 21441.35 புள்ளிகளாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், டேவிஸ் லேப்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், என்டிபிசி, அதானி எண்டர்பிரைசஸ், மஹிந்திரா, ஓஎன்ஜிசி, அப்பல்லோ ஹாஸ்பிடல், விப்ரோ, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, கோட்டக் வங்கி, கோல் இந்தியா, பிபிசிஎல், ரிலையன்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஹெச் சி டெக் போன்றவை சரிவை சந்தித்துள்ளன.