தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் 'ஆவின்' நெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமின்றி, வெண்ணெய், நெய் உட்பட 200க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரித்து விற்கப்படுகிறது. ஆவின் நெய்க்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது, ஆவின் பால் கொள்முதல் குறைந்து வருவதால் நெய், வெண்ணெய் தயாரிக்க முடியாமல் ஆவின் நிர்வாகம் திணறி வருகின்றது.
பாலகம் மட்டுமின்றி, மளிகை கடை மற்றும் மொத்த விற்பனை மார்க்கெட்டுகளிலும் ஆவின் நெய் பாட்டில்கள் விற்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் ஆவின் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 1 கிலோ மற்றும் 100 கிராம் நெய் பாட்டில்கள் மட்டுமே ஆவின் உற்பத்தி பிரிவில் தற்போது கையிருப்பில் உள்ளது. இதனால் 200, 500 மி.லி., நெய் பாட்டில்கள் கிடைப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.