இங்கிலாந்தில், கடந்த மே 4ம் தேதி, கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து, கடந்த 18ம் தேதி, மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், கவென்ட்ரி நகர மேயர் பதவிக்கு, கட்சி அடிப்படையில் இல்லாமல், திறமை மற்றும் நேர்மையின் அடிப்படையில் கவுன்சிலர்கள் வாக்களித்து, சீக்கியரான ஜஸ்வந்த் சிங்க் பிர்டியைத் தேர்வு செய்துள்ளனர். இவர், கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவராவார். ஆனால், கவென்ட்ரி நகரத்தில் தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜஸ்வந்த் சிங், 17 ஆண்டுகள் கவுன்சிலராகவும், ஓராண்டு துணை மேயர் ஆகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது குடும்பம் கடந்த 1960 முதல் கவென்ட்ரி நகரில் வசித்து வருவதால், அவருக்கு உள்ளூர் நிலவரங்கள் குறித்த கள அறிவு உள்ளது. எனவே, அவர் திறமையாக மேயர் பொறுப்பை வகிப்பார் என்று கருதப்படுகிறது. மேலும், இங்கிலாந்தில், மேயர் பதவியில் அமர்ந்த முதல் சீக்கியராக இவர் அறியப்படுகிறார்.