அமெரிக்காவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் பிரிட்டன் பிரிவை தனியாருக்கு விற்க இங்கிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் பிரிவை, எச்எஸ்பிசி வங்கி ஒரு பவுண்ட் ஸ்டெர்லிங்க்கு வாங்கி உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 99 ரூபாய் ஆகும். இதில், 3000 பிரிட்டன் வாடிக்கையாளர்களின் 8.1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் கூடுதலான வைப்புத் தொகை உள்ளது. மேலும், 6.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கடன் உள்ளது.
இதுகுறித்து பேசிய எச்எஸ்பிசி வங்கியின் தலைமை செயல் அதிகாரி நோயல் குயின், “எங்கள் பிரிட்டன் வர்த்தகத்தில், எஸ்விபி வங்கிச் செயல்பாடுகளை கைப்பற்றியது முக்கிய வணிக உத்தி ஆகும். சிலிகான் வேலி வங்கியின் பிரிட்டன் வாடிக்கையாளர்கள் குழப்பமடைய வேண்டாம். அவர்களது பணம் பாதுகாப்பாக உள்ளது” என்று கூறியுள்ளார்.