உலகில் உள்ள மிகப் பழமையான நாகரீகங்களுள் ஒன்று சிந்துவெளி நாகரிகம் ஆகும். அதற்குப் பின்னானத் தொடர்ச்சியாக வைகை நதி நாகரிகமும் பொருநை நதி நாகரிகமும் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதலில் அறிவியல் ரீதியில் சிந்துவெளியில் கிடைத்த ஆதாரங்கள் சங்கத்தமிழ் இலக்கியங்களுடன் மிகவும் ஒத்துப் போனதால், சிந்துவெளியைப் போன்ற வளர்ச்சியடைந்த நகர நாகரிகம் தமிழகத்தில் இருந்திருக்கக் கூடும் என்ற யூகம் வலுத்தது. பின்னர் அதற்கானத் தேடலில், வைகை மற்றும் பொருநை நதிக் கரைகளில் சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி நிலைக்கான அறிவியல் ஆதாரங்கள் பல கிடைத்துள்ளன. எனவே, இதனடிப்படையில் இந்த நதிக் கரைகளில் உள்ள பழம்பெரும் ஊர்களில் தொல்லியல் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்தனைச் சிறப்புகளை உள்ளடக்கிய ஆராய்ச்சிகளின் சிறிய அறிமுகம் இதோ:
4,500 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் நடுப்பகுதி தொடங்கி ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் வரை 5 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலான சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா வழியாக தமிழ் நிலப்பரப்புக்கு இடம் பெயர்ந்தார்களா, உத்தரப் பிரதேசம், பீகார் வழியாக கங்கைச் சமவெளிக்கு இடம்பெயர்ந்தார்களா என்பது இதுவரையில் விடைக் காண முடியாத கேள்வியாக இருந்து வந்தது. தென்னிந்தியப் பகுதிகளில் வளர்ச்சி பெற்ற நாகரிகங்கள் இல்லை, ஆதலால் கங்கைச் சமவெளி நாகரிகமே பழைமையானது என்று கடந்த சில ஆண்டுகள் முன்பு வரையில் கருதப்பட்டு வந்தது. பின்னர் வைகை மற்றும் பொருநை நதிக் கரைகளில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில், சிந்து சமவெளியில் கிடைத்ததைப் போன்ற உருவ எழுத்துகள், குறியீடுகள், தமிழ் எழுத்துகள், பகடைக்காய்கள், திமில் உள்ள காளைகளின் எலும்புகள், கறுப்பு சிவப்புப் பானையோடுகள் ஆகியன கிடைத்துள்ளன. எனவே, வைகை நதி நாகரிகமும் பொருநை நதி நாகரிகமும் முன்னர் இருந்த கருதுகோளை உடைத்தெறிந்து விட்டன. மேலும், சிந்துவெளி நாகரிகத்திற்கும் வைகை மற்றும் பொருநை நதி நாகரீகங்களுக்கும் உள்ள ஒற்றுமையையும் தொடர்பையும் உறுதி செய்து, இதுவரையில் கூறப்பட்டு வந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய நிலையையும் உணர்த்திவிட்டன.
வைகை நாகரிகம்:
வைகை நதிக்கரையில் இருக்கும் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் தற்போது அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. முதலில் ஈமக்காடுகள் கண்டறியப்பட்டது. ஈமக்காடுகள் இருந்தால் மக்களின் வாழிடங்களும் இருக்கக் கூடும் என்ற நோக்கில், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்று வருகின்றன. இதுவரையில் வைகையில் நிகழ்ந்த அகழாய்வுகள், மண்ணுக்குள் புதைந்திருந்த 2580 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வரலாற்றை மீட்டுத்தந்திருக்கிறது. தற்போது ஆய்வுகள் மேலும் நடைபெறுவதால், இன்னும் பல அறிவியல் சான்றுகள் கிடைக்கக்கூடும்.
பொருநை நாகரிகம்:
சங்க இலக்கியங்களில் ‘பொருநை நதி’ என்று குறிப்பிடப்பட்டுள்ள தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை போன்ற பகுதிகளில் தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வு செய்துவருகிறது. பொருநை நாகரிகம் தொல் தமிழரின் நாகரிகமாக உறுதிசெய்யப்பட்டு, 3155 ஆண்டுகளுக்குத் தமிழர் வரலாற்றைப் பின்னோக்கி நகர்த்தியிருக்கிறது. பொருநை நாகரிகத்தில் அமைந்துள்ள துறைமுக நகரமான கொற்கை, தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டு வந்த தமிழர்களின் வணிக மேலாண்மையை உறுதிசெய்யும் விதத்தில், தமிழகம் மற்றும் வெளி உலகிற்கானத் தொடர்புகளை அறியும் சான்றுகளைத் தந்துள்ளது.
இவ்வாறு, தமிழர்களின் தொன்மை மற்றும் மேன்மையை உலகிற்கு எடுத்துரைக்கும் இந்த நாகரிகங்களைப் பற்றிய பல கட்டுரைகளை இந்தப் பகுதியில் தொடர்ந்து காணலாம்.