சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வரலாற்று லாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, விமான நிறுவனத்தின் வருவாய் 2.16 பில்லியன் சிங்கப்பூர் டாலர்களாக உள்ளது. எனவே, தகுதி வாய்ந்த பணியாளர்கள் அனைவருக்கும் 6.65 மாத சம்பளம் போனசாக வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஊழியர்களின் கடின உழைப்பு, தியாகம் உள்ளிட்டவைகளுக்கான அங்கீகாரமாக, கூடுதலாக 1.5 மாத சம்பளம் போனஸ் ஆக வழங்கப்படும் என்று கூறியுள்ளது. ஆனால், விமான நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு, இந்த கூடுதல் போனஸ் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இந்த தகவல்களை கூறியுள்ளார். மேலும், விமான நிறுவனத்தின் சிறந்த உத்திகளால் நல்ல லாபம் ஈட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அத்துடன், விமான சேவைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால், எதிர்காலத்திலும் நல்ல வர்த்தக உயர்வை எதிர் நோக்குவதாக கூறியுள்ளார். இந்த தகவல் வெளியான பின்னர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.2% உயர்ந்து வர்த்தகமாகின்றன.