சிங்கப்பூர் நாட்டின் மத்திய வங்கி, தனது வரலாற்றில் மிகப்பெரிய இழப்பை பதிவு செய்துள்ளது. கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், தனது நாணயக் கொள்கையில் முக்கிய முடிவுகளை சிங்கப்பூர் மத்திய வங்கி கொண்டு வந்தது. பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாணய கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் விளைவாகவே, இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். வங்கியின் நிகர இழப்பு 30.8 பில்லியன் சிங்கப்பூர் டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. வங்கியின் நிர்வாக இயக்குனர் ரவி மேனன், இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும், பணவீக்கம் 2.5% ல் இருந்து 3% ஆக உயரும் என கணிப்பதாக கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து பேசிய அவர், வங்கியின் இந்த இழப்பு காரணமாக, அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் திறனில் எந்தவித குறைபாடும் நேராது என உறுதி அளித்துள்ளார். மேலும், வருந்த தக்க அளவில் எந்த வித பாதிப்பையும் இந்த இழப்புகள் ஏற்படுத்தாது என்று நம்புவதாக கூறியுள்ளார்.