நாட்டில் அனைத்து பாடங்களுக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்துக்கு வந்துள்ள மத்திய இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் வெள்ளிங்கேட் பகுதியில் தனியார் பள்ளியில் நடந்த நிகழ்வில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு என்பது தேசத்தின் பொதுவான நுழைவு தேர்வு என்றும், இது பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்கள் பல நுழைவு தேர்வுகளை எழுதாமல் இருக்கவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கவலையில் இருந்து காப்பாற்றவும் அனைத்து பாடங்களுக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறினார். புகழ்பெற்ற நிபுணர்களை கொண்டு மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை வடிவமைத்து இருப்பதாக தெரிவித்த ராஜ்குமார் ரஞ்சன் சிங் இதன் மூலம் மாணவர்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தமுடியும் என்றார்.