செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் சரக்கு கப்பல் ஒன்று கடுமையாக சேதம் அடைந்தது. இதன் காரணமாக சுமார் 29 கிலோமீட்டர் தொலைவிற்கு எண்ணெய் படலம் கடலில் பரவியுள்ளது என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
இது குறித்து ராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், செங்கடல் வழியாக பெலிஸ் நாட்டு கொடி ஏற்றிய ரூபிமர் சரக்கு கப்பல் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக சேதம் அடைந்துள்ளது. இதன் விளைவாக அந்த கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேறுகிறது. தற்போது செங்கடல் பகுதியில் 29 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த எண்ணெய் படலம் பரவி வருகிறது. ரூபிமர் கப்பலில் உரம் வைக்கப்பட்டிருந்தது. அந்த கலனும் சேதமடைந்துள்ளதால் அந்த பகுதியில் உரம் கடலில் கலந்து பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த ரூபிமர் கப்பல் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை லெபனானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இயக்கி வருகிறது.
இஸ்ரேல் தொடர்பான சரக்கு கப்பல்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முன்பு கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் பிற கப்பல்களையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஹவுதிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த அவர்களின் நிலைகள் மீது இங்கிலாந்தும், அமெரிக்காவும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இருந்த போதிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா விமானத்தை அவர்கள் சுட்டு வீழ்த்தினர்.