ஒரு மொழியைப் பல தலைமுறைகள் தாண்டியும் செழிக்கச் செய்ய, மொழியைக் குழந்தைகளின் வசமாக்க வேண்டும். மொழியை எழுத்து வடிவத்தில் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் பாடத்திட்டத்துக்கு அடுத்தபடியாக முதன்மைப் பங்கு வகிப்பது 'சிறுவர் இலக்கியம்' ஆகும். சிறுவர் இலக்கியம் சிறப்பாக உள்ளச் சமுதாயமே மிகச்சிறந்த சமுதாயமாக வாழ முடியும்.
சிறுவர் இலக்கியம் என்பது பேசத்துவங்கும் குழந்தை முதல் சுமார் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கான இலக்கியம் ஆகும். ஏழு வயது வரையிலானோர்க்கான இலக்கியத்தைக் குழந்தை இலக்கியம் என்றும் அதற்கும் அதிகமான வயதினருக்கானதைச் சிறுவர் இலக்கியம் என்று வகைப்படுத்துகின்றனர். இரண்டு வகையினருக்குமான தேவை, வடிவம், களம், மொழி ஆகியவை நுட்பமாக மாறுபடும். ஆனாலும் பொதுவாக இவை இரண்டும் சிறுவர் இலக்கியம் என்றே பரவலாக வழங்கப்படுகின்றது.
தமிழ் மொழியில், பன்னெடுங்காலமாகவே வாய்மொழியாகத்தான் சிறுவர் இலக்கியங்கள் பெரும்பான்மையாக அறியப்படுகின்றன. தாயின் ஆராரோ பாடலில் தான் குழந்தைக்கு இலக்கியம் அறிமுகமாகின்றது. இதுவே சிறுவர் இலக்கியத்தின் முன்னோடியாகும். சிறுவர் இலக்கியத்தின் அடுத்தப் பதிவாகக் கிடைப்பது "விடுகதை" என்று அறியப்படும் புதிர்களாகும். ஒரு பொருளை மறை பொருளாக விவரித்துத் தொடுக்கப்படும் ஒரு வினாவிடை வடிவமே விடுகதை ஆகும். இதை 'நொடி' என்றும் 'பிசி' என்றும் பழந்தமிழில் கூறுவார்கள். தொல்காப்பியத்தில் விடுகதைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. விடுகதைகள் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுவதாயும், ஆராய்ந்து அறியும் திறனை வளர்ப்பதாயும் அமைகின்றன.
குழந்தைகளின் உலகம் கற்பனைகளும், கதைகளும் நிறைந்தது. எனவே, சிறுவர் இலக்கியத்தில் கதைகளுக்கே முதன்மை அளிக்கப்படும். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே பெரும்பான்மையான சிறுவர் கதைகள் இயற்றப்பட்டதென்பது வரலாறு. பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன், மரியாதை ராமன் கதைகள், நாடோடிக் கதைகள், புராண இதிகாசக் கதைகள், திருக்குறள் கதைகள் போன்றவை 19 ஆம் நூற்றாண்டில் தோன்றியவையே ஆகும். ஆனால், சங்க காலத்திலேயே சிறுவர் கதைகளுக்கான வித்து விதைக்கப்பட்டுவிட்டது. தொல்காப்பியத்தில்(485), ஒரு யானையும் ஒரு குருவியும் நட்பு கொண்டு இங்கு இங்குச் சென்று இவை இவை செய்தது என்ற குறிப்பு வருகின்றது. இதுவே பிற்கால நாடோடிக் கதைகளுக்கான வித்தாகும். மேலும் வாய்மொழிக் கதைகளே தமிழில் ஏராளமாய் அறியப்படுகின்றன. கதை என்றவுடனேயே 'பாட்டி வடை சுட்ட கதை ' நினைவில் வரும் அளவிற்கு எண்ணற்ற வாய்மொழிக் கதைகள் தமிழில் இருக்கின்றன.
சிறுவர் இலக்கியங்களின் நோக்கமே இளஞ்சிறார்களை நல்வழிப் படுத்துதலாகும். அதன் படி, உலகின் எல்லா மொழிகளுக்கும் முன்னோடியாகத் தமிழ் மொழியில் சிறுவர்களுக்கு அரிச்சுவடியே நீதி போதனையாகத் தான் கற்றுத் தரப்படுகிறது. "அறம் செய்ய விரும்பு; ஆறுவது சினம்..." என்று எழுத்துக்கோர் நீதியைத் தந்தது ஆத்திச்சூடி. பதினொன்றாம் நூற்றாண்டில் தோன்றிய ஒளவையாரின் ஆத்திச்சூடி, தமிழில் உள்ள சிறுவர் இலக்கியங்களில் ஆகச் சிறந்த நூலாகும்.
ஒளவையைத் தொடர்ந்து படைக்கப்பட்ட சிறுவர்களுக்கான நீதி போதனை, அதிவீரராம பாண்டியர் எழுதிய ‘வெற்றிவேற்கை’ என்ற நூலாகும். “எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்”, “கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சைப் புகினும் கற்கை நன்றே” ஆகிய புகழ்பெற்ற வரிகள் இந்த நூலில் அறியப்பட்டவையே. இதே போல மற்றொரு நீதிநூல் உலகநாதர் எழுதிய உலகநீதி. “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” என்ற வரிகளை அறியாத தமிழகச் சிறுவர்களே இருக்க முடியாது எனுமளவிற்கு எளிமையாகச் சிறுவர்களுக்கு நீதியை உரைத்தது இந்த நூல்.
குழந்தைகளைப் பெரிதும் கவர்வது பாடல்களாகும். சந்த நயத்துடன் பாடப்படும் பாடல் பாடுபவருக்கும் கேட்பவருக்கும் மகிழ்வினைக் கொடுக்கின்றது. எனவே சிறார் இலக்கியத்தில் முக்கிய இடம் குழந்தைப்பாடல்களுக்கு அளிக்கப்படும். பாரதியாரின் பாப்பா பாட்டு, கவிமணி பாடிய குழந்தைப் பாடல்கள் ஆகியவை பாடப் புத்தகங்களிலும் சேர்க்கப்பட்டன. இவர்கள் வரிசையில் "குழந்தைக் கவிஞர்" என்று அறியப்படும் அழ.வள்ளியப்பா அவர்கள், 1950 இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் ஒன்றை நிறுவினார். இதன் மூலம் பற்பல குழந்தை இலக்கியங்கள் அச்சுப்பெற்று மக்களைச் சென்றடைந்தன. சென்ற நூற்றாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 50 சிறுவர் இதழ்கள் தமிழில் வெளிவந்தன. ஆனால், அவற்றில் வெகு சில இதழ்களே இன்று நிலைத்திருக்கின்றன.
இன்றைய காலகட்டங்களில் குழந்தை இலக்கியங்கள் பரந்துபட்ட வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், நவீன கட்டமைப்புகளும், ஆடம்பரங்களும் சிறார் இலக்கியங்களைக் காட்சி ஊடகத்தில் நிலைபெறச் செய்து விட்டன. குழந்தைகளுக்கான காட்சி ஊடகம் பெரிதும் வளர்ந்திருப்பது கடந்த பத்தாண்டுகளாகத்தான். எண்ணற்ற கதைகளும் பாடல்களும் சித்திரத் தொடர்கள், காணொலிகள், குறும்படங்கள் மூலமாகக் காணக்கிடைக்கின்றன. சிறார் இலக்கியம் சித்திரக் காட்சிகளாக உருமாறிவிட்டது.
ஆனால், இணையத்திலும் ஊடகங்களிலும் நாளுக்கு நாள் காட்சி வடிவிலான சிறார் இலக்கியங்களின் எல்லை விரிந்து கொண்டே செல்கிறது என்று பெருமைப்படும் அதே வேளையில் எழுத்து வடிவிலான சிறார் இலக்கியங்கள் எனும் ஆணி வேர் அழுகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அடுத்த தலைமுறைக்கு ஒரு மொழி சென்று சேராவிட்டால் அஃது இன்று எவ்வளவுதான் வளமாக இருந்தாலும், எந்த அளவுக்குப் பயன்பாட்டில் இருந்தாலும் நிலைபெறாது என்பதே உலக வரலாறு. எழுத்துத் தமிழ் இப்படி அழிந்து போனால், அதன் பின் வெறும் பேச்சுத் தமிழ் ஊடகங்களான காணொலி, தொலைக்காட்சி, திரைப்படம், சித்திரத் தொடர்கள் போன்றவை மட்டும் எத்தனை நாட்களுக்கு நிலைத்து விட முடியும்? எனவே தமிழ் மொழியின் இன்றைய நன்னிலை நீடிக்க வேண்டுமானால், ஒன்பதாயிரம் ஆண்டுகாலத் தமிழ் மொழி இந்தத் தலைமுறையோடு அழிந்து விடாமல் இனியும் தொடர்ந்து வாழ வேண்டுமானால் சிறார் இலக்கியம் எழுத்து வடிவிலும் தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
தமிழ்ச் சிறுவர் இலக்கியம் புத்துயிரூட்டப்பட வேண்டியது இன்றியமையாதது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டிய நேரமிது. சிறுவர்களை புத்தகங்கள் வாசிக்கவும் நேசிக்கவும் உற்சாகப்படுத்த வேண்டும். வாசிப்பு என்பதைச் சிறு வயது முதலே இனிக்கச் செய்ய வேண்டும்.