தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. இலக்கிய நூல்களை வாய்மொழி இலக்கியம், பெரும் காப்பியம், சிறு காப்பியம், சிற்றிலக்கியம் போன்றவாறு வகைப்படுத்தலாம்.
ஒரு இலக்கிய நூல், காப்பியம் போன்று அல்லாமல், குறைந்த பாடல் அளவு கொண்டிருந்தால் அது சிற்றிலக்கியம் எனப்படும். மேலும், பெரும் காப்பியங்கள் போல இது ஒரு முழுமையான கதையமைப்பு கொண்டிருக்காது. உதாரணத்திற்கு ஒரு மன்னனின் வாழ்க்கையை முற்றிலுமாகப் பாடுவது காப்பியம் ஆகும். ஆனால் மன்னனின் வாழ்கையில் நடந்த ஒரு நிகழ்வை மட்டுமே பதிவு செய்தால் அது சிற்றிலக்கியம் ஆகும். காப்பியங்கள் என்பது அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் அனைத்தையுமே கொண்டிருக்கும். அவற்றுள் ஏதேனும் ஒன்றை மட்டும் தருவதாக அமைவது சிற்றிலக்கியம் ஆகும். முதலில் சிற்றிலக்கியங்கள் "பிரபந்தம்" எனும் வடமொழிச் சொல்லால் அறியப்பட்டது. பின்னர் தனித் தமிழில் பெயர் கொண்டது.
சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்று கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய பிரபந்த மரபியல் என்ற பாட்டியல் நூல் கூறுகின்றது. இந்நூல்,
பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத்
தொண்ணூற் றாறுஎன்னும் தொகையது ஆம்
என்கிறது.
அதாவது, பிள்ளைத் தமிழ் என்ற இலக்கிய வகை முதலாகப் புராணம் ஈறாகத் தொண்ணூற்றாறு வகைப்பட்டது பிரபந்தம் என்பது இதன் பொருள் ஆகும்.
வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியும் 96 இலக்கிய வகைகளைக் குறிப்பிடுகின்றது.
சிவந்தெழுந்த பல்லவன் உலா என்ற நூலில், "தொண்ணூற்றாறு கோலப் பிரபந்தங்கள் கொண்ட பிரான்" என்ற தொடர் இடம் பெறுகின்றது. இவற்றால், சிற்றிலக்கியங்கள் 96 என்று கூறப்படும் பொதுவான மரபு இருந்துள்ளது என்று தெரிகிறது. ஆனால், இக்காலத்தில் முந்நூற்று ஐம்பதற்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகைகள் உள்ளன என்று அறிஞர்கள் கூறுவர். எனவே, சிற்றிலக்கிய வகைகள் இவ்வளவு என்று வரையறுத்துக் கூற இயலாது.
சிற்றிலக்கியத்திற்கான சான்றுகள் சங்க காலம் முதலே கிடைக்கப் பெறுகின்றன. தொல்காப்பியத்தில் பிள்ளைத் தமிழ், தூது, உலா, ஆற்றுப்படை ஆகியவற்றைக் குறித்த கருத்துகள் இடம்பெறுகின்றன. பின்னர், பல்வேறு காலங்களில் பல்வேறு சிற்றிலக்கிய நூல்கள் இன்று வரையிலும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. எனினும், சிற்றிலக்கிய வகைகள் எழுச்சிப்பெற்று, மேலோங்கி நின்ற காலத்தின் அடிப்படையில், கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை "சிற்றிலக்கியக் காலம்" என்று அழைக்கப் படுகிறது.
சிற்றிலக்கிய வகைகளுள் மிகவும் பிரபலமானவை என்று 12 வகைகளைக் கூறலாம். அவை ஆற்றுப்படை, பள்ளு, உலா, கோவை, பிள்ளைத் தமிழ், குறவஞ்சி, கலம்பகம், தூது, அந்தாதி, மாலை, பதிகம், பரணி என்பவையே ஆகும்.