பட்டாசு வணிகத்தை பொறுத்தவரை, சர்வதேச அளவில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் சிவகாசி பட்டாசுகள் சர்வதேச சந்தையில் களமிறங்க உள்ளன. சிவகாசியில் சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்பில் பட்டாசு தொழில் இயங்கி வருகிறது. சிவகாசி பட்டாசுகளுக்கு இந்தியாவில் பெரும் அளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், சமீப காலமாக இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் பெரும்பாலானவை பசுமை பட்டாசுகள் தரத்தில் உள்ளன. எனவே, சர்வதேச சந்தையில் பசுமை பட்டாசு விற்பனையில் சிவகாசி பட்டாசு வணிகர்கள் களம் இறங்க திட்டமிட்டுள்ளனர்.
பசுமை பட்டாசுகளுக்கான ஒழுங்குமுறை ஆணையம், 15 கோடி ரூபாய் மதிப்பில் பரிசோதனைகளை நடத்தி, பசுமை பட்டாசுகளுக்கான தர நிர்ணயங்கள் சிவகாசி பட்டாசுகளில் உள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, சிவகாசி பட்டாசுகள் பரிசோதனைக்காக நாக்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில், சிவகாசியில் உள்ள CSIR- NEERI ஆலையில் தயாரிக்கப்படும் பொருள் மூலம், சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 30 சதவீத மாசு குறைவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச அளவில் 26,000 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் சீன பட்டாசுகளுக்கு மத்தியில், சிறிய அளவில், சிவகாசி பசுமை பட்டாசுகள் விற்கப்பட உள்ளன.
தமிழ்நாடு பட்டாசு ஆலைகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி கணேசன் இது குறித்து பேசினார். அவர், சோனி ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர், “கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, பட்டாசு தொழில் மிகவும் நலிவடைந்தது. ஆனால், நடப்பு ஆண்டில், சிவகாசியில் பட்டாசு தொழில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்தியாவில் புது டெல்லி தவிர பிற பகுதிகளில் பட்டாசுகளுக்கு தடை இல்லை என்பதால், இந்த தீபாவளிக்கு நல்ல முறையில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது” என்று கூறினார்.
பட்டாசு தொழிலில் பிரபல நிறுவனமான ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ் மகேஸ்வரன் இது குறித்து பேசும்போது, “கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர், சீன பட்டாசுகளை நோக்கிச் சென்ற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள், தற்போது சிவகாசி பட்டாசுகள் பக்கம் திரும்பி உள்ளன. பசுமை பட்டாசுகளுக்கு மாறியதன் மூலம் சர்வதேச பார்வை சிவகாசி பட்டாசு தொழிலுக்கு கிடைத்துள்ளது” என்று கூறினார்.
மேலும், சீனாவில் இருந்து மிகப்பெரிய அளவில் பட்டாசு ஏற்றுமதி செய்யப்படுவதால், விநியோகச் சங்கிலி சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால், சிவகாசியில் இருந்து, குறைந்த அளவில் ஏற்றுமதி நிகழும் பொழுது, விநியோகச் சிக்கல்கள் ஏற்படும். எனவே, சர்வதேச சந்தையில் சிவகாசி பட்டாசு விற்பதற்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.