இரவில் நெடுநேரம் கண் விழித்திருக்கும் நபர்களுக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 19% உள்ளதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரவில் நேரம் கழித்து தூங்கி, காலையில் நேரம் கழித்து விழிக்கும் நபர்களுக்கு, காலையில் சீக்கிரமாக விழிக்கும் நபர்களை விட நீரிழிவு பாதிப்பு 19% அதிகமாக ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. சுமார் 64000 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். கடந்த 2009 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில், அவர்களுடைய தூங்கும் பழக்கம், உணவு பழக்கம், போதை பொருள் பயன்பாடு, உடல் உழைப்பு, மரபு ரீதியான நீரிழிவு பாதிப்புகள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில், காலையில் சீக்கிரமே விழிக்கும் நபர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வெறும் 6% பேர் மட்டுமே, உடல் பாதிப்புகளை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவே, இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருப்போரில் 25% பேர் உடலில் பாதிப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே, இரவு நேர பணியாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கூடுமானவரையில் இரவில் கண் விழித்திருப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.