2022-23-ல் சிறுதானிய உற்பத்தி 205 லட்சம் டன் என மத்திய உணவுத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறியுள்ளார்.
2022-23-ல் சிறுதானிய உற்பத்தி குறித்து மத்திய உணவுத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் சிறு தானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் 14 மாநிலங்களில் உள்ள 212 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. குஜராத், கர்நாடகா, ம.பி., மகாராஷ்டிரா, ராஜஸ்தான்,தமிழ்நாடு, உ.பி. ஆகியவை சிறுதானியங்களை அதிகம் பயிரிடுகின்றன. முழுமையான ஊட்டச்சத்துக்கான பிரச்சாரத்தில் சிறுதானியமும் சேர்க்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், நம் நாடு 13.71 முதல் 18 மில்லியன் டன்களுக்கும் அதிகமான சிறுதானிய உற்பத்தி செய்தது. இதில் 2020-21-ல் நாடு மிக அதிக உற்பத்தியை கண்டது.
2022-23-ம் ஆண்டில் சிறுதானிய உற்பத்தி 205 லட்சம் டன்களாக இருக்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.