சிறு சேமிப்பு திட்டங்கள் சிலவற்றுக்கான வட்டியை 30 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சிறு சேமிப்பு திட்டங்கள் சிலவற்றில், மூன்றாவது காலாண்டுக்கான வட்டி விகிதம் 30 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மூன்று ஆண்டுகளுக்கான வைப்புத் தொகை வட்டி 5.5 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக உயர்கிறது.
மூத்த குடிமக்களின் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி அக்டோபர் - டிசம்பர் காலத்தில் 20 அடிப்படை புள்ளிகள் உயர்கின்றன. இதனால் தற்போதைய 7.4 சதவீத வட்டி 7.6 சதவீதமாக உயரும். 'கிசான் விகாஸ்' பத்திரங்களுக்கான கால அளவு மற்றும் வட்டி விகிதங்களும் திருத்தப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.