குவால்கம் டெக்னாலஜிஸ் நிறுவனம், ஸ்னாப்டிராகன் சாட்டிலைட் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கைபேசிகளுக்கான உலகின் முதல் இருவழி செயற்கைக்கோள் தொடர்பு ஸ்னாப்டிராகன் சாட்டிலைட்டில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இரண்டாம் தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 தளத்தை கொண்ட கைபேசிகளில் இந்த சேவைகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, தற்போது புதிதாக அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ் 23, ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ், விவோ எக்ஸ்9 ப்ரோ பிளஸ் போன்ற கைபேசிகளில் இந்த அம்சம் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
"விண்வெளியில் உள்ள இரிடியம் செயற்கைக்கோள் குழுமம் இந்த புதிய ஸ்னாப்டிராகன் தொடர்புகளை இயக்குகிறது. இதன் மூலம் உலகின் எந்த பகுதியில் இருந்தும், மற்றொரு நபருக்கு தொடர்பு கொண்டு பேச முடியும். இதற்காக, தனியாக நெட்வொர்க் (ஏர்டெல், ஜியோ போன்ற) எதுவும் தேவை இல்லை. மேலும், இந்த செயற்கைக்கோள் தொடர்பு வசதி கைப்பேசிகளுக்கானது மட்டுமல்ல; இந்த வசதியை எதிர்காலத்தில், கணினிகள், வாகனங்கள் போன்றவற்றிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஐபோன்களில் இதே போன்ற வசதியை ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.