அமெரிக்காவில் பனி புயலை அடுத்து நாடு முழுவதும் 1,700 விமானங்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்ட பனி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், டெக்சாஸ் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான சாலை விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. சாலை விபத்தில் சிக்கி மொத்தம் 2 பேர் பலியாகி உள்ளனர். டல்லாஸ் நகரில் போர்ட் ஒர்த் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் என 900 விமானங்கள் வரை நேற்று ரத்து செய்யப்பட்டோ அல்லது காலதாமதத்துடனோ இயக்கப்பட்டன. 50 சதவீதத்திற்கும் கூடுதலான விமான சேவை நேற்று மதியம் ரத்து செய்யப்பட்டன. அவற்றில் அதிக அளவாக டல்லாசை அடிப்படையாக கொண்ட, தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 560 விமானங்களை ரத்து செய்தது. 350 விமானங்களின் சேவையில் காலதாமதம் ஏற்பட்டது.
இதேபோன்று, டல்லாசின் லவ் பீல்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் 250 விமானங்கள் வரை நேற்று ரத்து செய்யப்பட்டோ அல்லது காலதாமதத்துடனோ இயக்கப்பட்டன. மொத்தம், 1,700 விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. டெக்சாஸில் பனியால் ஏற்பட்ட பாதிப்பால் 7 ஆயிரம் இடங்களில் மின் இணைப்பு தடைப்பட்டது. நடப்பு ஆண்டில் கடந்த 10 நாட்களில் தென்மேற்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 16,700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.