இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது தொடர்பாக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இலங்கை மின் வாரியமும் இந்திய தேசிய அனல் மின் கழகமும் (என்டிபிசி) இணைந்து, சம்பூர் பகுதியில் 50 மெகாவாட் மற்றும் 70 மெகாவாட் திறனுடைய இரண்டு சூரிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்க உள்ளன. ஏற்கனவே அந்த பகுதியில் இயங்கி வந்த அனல் மின் நிலையம், புதிய ஒப்பந்தத்தின் படி சூரிய மின் நிலையமாக மாற்றப்பட உள்ளது.
இந்நிலையில், இலங்கையில் அதானி குழுமத்தின் பசுமை எரிசக்தி திட்டம் நெடுநாள் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. மின் கொள்முதல் விலை அதிகமாக இருப்பது சிக்கலாக உள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்க, அதனை குறைக்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிபர் அநுர குமார திசாநாயக்க, அதானி காட்டிய விலையை விட குறைந்த விலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்க தயாராக இருக்கும் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு பரிந்துரைகள் கிடைத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.