சோனி நிறுவனம், ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து, அதிநவீன மின்சார கார் ஒன்றை உருவாக்க உள்ளது. அஃபிலா என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மின்சார காரின் மாதிரி வடிவத்தை, CES tech காட்சியில், சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வரும் 2025 ஆம் ஆண்டு, இந்த மின்சார வாகனத்திற்கான முன்பதிவுகள் தொடங்கப்படும் என்று சோனி ஹோண்டா மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யாஷுண்டே மிசுநோ தெரிவித்துள்ளார். மேலும், வட அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு 2026 ஆம் ஆண்டில், முதல் மின்சாரக் கார் விற்பனை செய்யப்படும் என கூறியுள்ளார். அத்துடன், இந்த புதிய காரில் சோனி நிறுவனத்தின் சென்சார்கள் மற்றும் ஹோண்டா நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை இணைந்து வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில், சோனி மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் 50 - 50 பங்களிப்பில் சோனி ஹோண்டா மொபிலிட்டி நிறுவனத்தில் இணைந்தன. இந்த நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப்படும் இந்த புதிய வாகனம், ஹோண்டா நிறுவனத்தின் 12 அமெரிக்க உற்பத்தி மையங்களில் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.