தென்கொரியாவில், ஓபன் ஏஐ மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் தரவுகள் கசிவில் சாட் ஜிபிடி மற்றும் மெட்டா நிறுவனங்கள் முக்கியமாக பங்கெடுத்து உள்ளதால், இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
தென்கொரியாவில், சுமார் 687 சாட் ஜிபிடி பிளஸ் கட்டண சந்தா பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளன. பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, கிரெடிட் கார்டின் கடைசி 4 எண்கள், காலாவதி தேதி போன்றவை கசிந்துள்ளதால், மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சாட்ஜிபிடி யின் ஓபன் சோர்ஸ் லைப்ரரியில் பிழை இருந்ததால் இந்த தகவல் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஓபன் ஏஐ நிறுவனம் முறையாக தகவல் தெரிவிக்க தவறியதால், அபராதம் விதிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 2.32 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் இதே போன்ற தகவல் கசிவில் பங்கேற்றிருந்ததால், கடந்த செப்டம்பர் மாதம் 30.8 பில்லியன் சவுத் கொரியன் வோன் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, பயனர்களுக்கு தெரியாமல் அவர்களது தகவல்களை சேகரித்தது தொடர்பாக, கூடுதலாக 7.4 பில்லியன் வோன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.