கடந்த சனிக்கிழமை, தென்கொரிய தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியாவில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் ஆண் டக் சூ, இந்த பேரிடரை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், அந்நாட்டின் அதிபர் யூன் சூக் இயோல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சியோல் நகரில் உள்ள குறுகலான மற்றும் செங்குத்தான பாதையில் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் இதனை ‘நரகம்’ போல இருந்ததாக தெரிவித்துள்ளனர். ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால், மொத்த பகுதியும் ஸ்தம்பித்து விட்டதாக கூறினர். மேலும், மீட்பு படையினருக்கு விபத்து பகுதிக்கு சென்று நடவடிக்கையில் ஈடுபட சிரமங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமராக்களில் இந்த விபத்து குறித்து பதிவான காணொளிகளை வைத்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. துல்லியமாக எத்தனை மணிக்கு, எந்த இடத்தில் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது எனவும், அது எவ்வாறு விரிவடைந்தது எனவும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களில் பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் நிகழவில்லை. எனவே, இந்த வருடம் கொண்டாட்டம் விமர்சையாக தொடங்கியுள்ளது. சனிக்கிழமை அன்று சுமார் 100000 பேர் வரை இங்கு திரண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, அந்நாட்டின் விடுதிகள், சுற்றுலா தளங்கள் மற்றும் தீம் பார்க்குகளில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தென்கொரியாவில், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த, ஆங்காங்கே தற்காலிக இரங்கல் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை நிலவரப்படி 154 பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் 153 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பெண்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 149 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 33 பேர் மோசமான நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இறந்தவர்களில் 80% மக்கள் 20 முதல் 40 வயது உடையவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 26 வெளிநாட்டினரும் இறந்துள்ளதாக தென்கொரியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டைச் சேர்ந்த 5 பேர், சீனாவை சேர்ந்த 4 பேர், ரஷ்யாவை சேர்ந்த 4 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர், ஜப்பானை சேர்ந்த 2 பேர் ஆகியோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலியா, நார்வே, பிரான்ஸ், ஆஸ்திரியா, வியட்நாம், தாய்லாந்து கஜகஸ்தான், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவரும் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, அந்தந்த நாட்டினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.